வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

Sunday, August 15, 2010

உரிமைக்குப் போராடிய கருப்பையா


  பயிற்சி மருத்துவராக  சமயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த போது நடந்த நிகழ்ச்சி.  காலை எட்டு  மணி  இருக்கும். அமைதியாக வரிசையில் வந்தார் அந்த நபர். மேஜையைச் சுற்றி நான்கு பேர் அமர்ந்திருந்த எங்கள் மருத்துவக் குழுவில் மற்ற மருத்துவர்களிடம் நோயாளிகள் இருந்ததால் என்னிடம் வர வேண்டிய நிலை அவருக்கு. அந்த PHC யிலேயே பணிபுரியும் மருத்துவ அலுவலரை பார்த்த படியே என்னிடம் வந்தார்.  அவரது பார்வையிலேயே என் மீது அவருக்கு இருந்த (அவ)நம்பிக்கை! புரிந்துவிட்டது.
                                     நமக்கு தான் ஆர்வக் கோளாறு அதிகமாச்சே. "இவர் திரும்ப இந்த PHCக்கு வந்தா நம்ம கிட்ட தான் வரணும். அந்த அளவு இவர சூப்பரா ட்ரீட் பண்ணனும்"னு முடிவு பண்ணிட்டேன். அவர்  கையில இருந்த சீட்டை வாங்கினேன்.   கருப்பையா, வயது 40 என்று எழுதி இருந்தது. ஆனால் ஆளைப் பார்த்தால் 60 க்கும் அதிகமாகவே சொல்லலாம். பொதுவாக கிராமத்து ஆட்கள் சொல்லும் வயதிற்கும் அவர்களைப்  பார்த்தால் நாம் நினைக்கும் வயதிற்கும் வித்தியாசம் அதிகம் இருக்கும். அதற்கு நிறைய காரணங்கள் சொல்லல்லாம். வெயிலில் அலைந்து திரியும் வேலை, சரியான பராமரிப்பு இன்மை....   நிறைய பேருக்கு பிறந்த வருடமே தெரியாது. குத்து மதிப்பாக ஒரு வருடம் வைத்து வயதைச் சொல்வார்கள். ஒரு ஆவரேஜா இவருக்கு 50 வச்சுக்கலாம். 
           " அய்யா உங்களுக்கு என்ன தொந்தரவு?"
            " கொஞ்ச நாளாவே உடம்பு சரி இல்ல சார்" 
                                  - இந்த மாதிரி Non specific complaints நிறைய பார்த்திருப்பதால் கேள்விய கொஞ்சம் திருப்பி போட்டேன்.
            "சரிங்க அய்யா, என்ன பண்ணுது?"
            "ரொம்ப தளர்ச்சியா இருக்கு சார். திடீர் திடீர்னு கால் வீங்குது. வேலையே பாக்க முடியல. எப்ப பாத்தாலும் படுக்கணும் போலவே இருக்கு சார்"
                                   வழக்கமான பரிசோதனை செய்ததில் அவருக்கு இரத்த அழுத்தம் சற்று அதிகமாக இருந்தது. இந்த "Undiagnosed hypertension" எந்த எந்த உறுப்புகளை பாதித்து உள்ளது என்பதை கண்டறிய வேண்டும்.
                "அய்யா உங்களுக்கு பிரஷர் இருக்க மாதிரி இருக்கு. இந்த இரத்த டெஸ்ட் பண்ணுனிங்கனா முழுக்க தெரிஞ்சுரும்" 
                        இரத்த அழுத்தத்தின் கூடா நட்பு டயாபட்டிஸ் கண்டுபிடிக்க இரத்த சர்க்கரை அளவு, சிறுநீரக செயல்பாட்டைக் கண்டறிய இரத்த யுரியா, கிரியாடினின் அளவுகளுக்கு குறித்து அவரிடம் அந்த சீட்டை தந்து,
               "அய்யா, இப்படியே நேர போயி இடது பக்கம் வளைஞ்சா Lab வரும். அங்க இந்த டெஸ்ட் பண்ணிட்டு வரிங்களா?"
                          அவருக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை போல. இதெல்லாம் கட்டாயம் பண்ணனுமா என்பது போல பார்த்தார்.
                  "எல்லாமே free தாங்க. காசுலாம் இல்ல. சும்மா பண்ணிட்டு வாங்க." 
                          வேண்டா வெறுப்பாக சென்றார். அருகில் இருந்த மருத்துவர்கள் எல்லாம் "ஒரே patient-a  வச்சு டைம் ஓட்டுறான்டா இவன்"  என்று முறைத்தனர். அதை கண்டுக்காதது போல அடுத்த நபரைப் பார்க்க ஆரம்பித்தேன். கொஞ்ச நேரம் கழித்து கருப்பையா வந்தார். கையில் டெஸ்ட் ரிசல்ட். நேர மற்றொரு மருத்துவரிடம் சென்றார். அவர் என்னிடம் போகும்படி கைகாட்ட வேறு வழியின்றி என்னிடம் வந்தார்.
                     நல்லவேளை இரத்த சர்க்கரை அளவு நார்மல். கிரியாடினின் மட்டும் சராசரியை விட அதிகமாக இருந்தது. ஆனாலும் கவலை இல்லை. இரத்த அழுத்ததை கட்டுக்குள் வைத்தால் போதும். சிறுநீரகத்தை பாதிப்பு இன்றி காப்பாற்றிவிடலாம்.
                      "அய்யா, உங்களுக்கு பிரசர் அதிகமா இருக்கு. அதன் தளர்ச்சி வருது. பிரசர் மாத்திரை சாப்பிடிங்கனா குறைஞ்சுரும். ஒன்னும் பிரச்சனை இல்ல. மாத்திரையை மட்டும் விடாம சாப்புடுங்க. திங்கள் கிழமை வாராவாரம் வந்து வாங்கிகோங்க"   
                                       உயர் இரத்த அழுத்த மாத்திரைகளை குறித்து கொடுத்தேன். ஒரு திருப்தி எனக்கு. Non specific complaints உள்ள ஒருவரை சோதித்து, காரணத்தைக் கண்டறிந்து அதையும் investigate பண்ணி  சரியான சிகிச்சை அளித்ததால் ஏற்பட்ட சந்தோசம்.
           கருப்பையா எதோ கேட்க நினைப்பது போல் நின்று கொண்டு இருந்தார். அப்போது தான் எனக்கு உணவு முறைகளை விளக்காமல் விட்டது ஞாபகம் வந்தது.
                "உப்பு மட்டும் குறைச்சுடுங்க. அரை உப்பு, கால் உப்பு போதும். கறி, மீனு, கோழிலாம் எப்பவாது சாப்டுக்கலாம். ஊறுகாய், அப்பளம் வேணாம். எண்ணெய், கொழுப்பு, மசாலா அயிட்டம் வேணாம். "
       கருப்பையாக்கு இன்னும் திருப்தி வரவில்லை.
              "ஊசி இல்லையா சார்?" 
      எனக்கு தெரிந்து உயர் இரத்த அழுத்ததிற்கு மாத்திரை தான். அவசர சிகிச்சையின் போது உடனடியாக குறைக்க வேண்டிய இடங்களில் மட்டும் தான் ஊசி மருந்து பயன்படும். இவருக்கு அது தேவை இல்லையே.
        "ஊசிலாம் வேணாம் அய்யா. இந்த மாத்திரை சாப்பிட்டாலே போதும்"
        "பரவாயில்லை சார். சும்மா ஒரு ஊசி போட்டுக்கிறேன். அப்ப தான் சரி ஆகும்."
       "அய்யா உங்களுக்கு இருக்குறது பிரசர். ஒரு ஊசி போட்டா சரி ஆயிடாது. டெய்லி மாத்திரை சாப்பிடனும்."
           "இல்ல சார் ஒரே ஒரு ஊசியாவது போடுங்க"
                அருகில் இருக்கும் மருத்துவர்கள் முறைக்க ஆரம்பித்தனர். வெளியில் 300 பேருக்கு மேல நோயாளிகள் நிற்கின்றனர். காலை 11 மணிக்கு முன்பு அனைவரயும் பார்க்க வேண்டும். நான் பார்க்கும் வேகத்தில் பார்த்தால் ராத்திரி 11 மணிக்கு கூட பார்த்து முடிக்க முடியாது. மருத்துவ அலுவலர் "கொஞ்சம் வேகமா பாருங்க டாக்டர்" என்றார்.
   வேற வழி இல்லை. மருத்துவ அலுவலரிடமே கேட்டேன். "Sir one hypertensive patient, wants injection.  what to do sir?" (உயர் இரத்த அழுத்த நோயாளி ஊசி கேட்கிறார். என்ன செய்ய சார்?)
அனுபவம்னா சும்மாவா? உடனே அவர் "prescribe inj.vitB12 doctor" (B12 வைட்டமின் ஊசியை எழுதுங்க டாக்டர்) . ஆஹா இந்த ஐடியா நம்ம கிட்ட இல்லையே. உடனே கருப்பையாக்கு inj.vitB12 குறித்து கொடுத்தேன்.
      "அய்யா, இந்த ஊசிய போட்டுகோங்க. அப்புறம் இந்த மாத்திரைய மறக்காம சாப்டுங்க."
           கருப்பையா முகத்தில் இப்போது தான் சந்தோசம்.
   'சரிங்க சார்" ஒருவழியாக கிளம்பி விட்டார். அப்பாடா!!!.
         கருப்பையாவுடன் மல்லுக்கட்டி பொழுதை ஓட்டியதால் எனக்கு தர வேண்டிய தேநீரை தரவில்லை நம்ம நண்பர்கள்.கேட்டால் கெட்ட வார்த்தையில் திட்டுவார்களோ என்று பயம் வேற. தண்ணீராவது குடிக்கலாம் என்று ரெஸ்ட் ரூம்க்கு கிளம்பினேன். வழியில் ஊசி போடும் அறையில் கருப்பையாவின் குரல் சத்தமாக கேட்டுக்கொண்டு இருந்தது.
                        "கொஞ்சம் ஏமாந்து இருந்தாலும் ஊசி போடாம அனுப்பிருப்பாரு அந்த சின்ன டாக்டர். நம்ம பெரிய டாக்டர் தான் ஊசி எழுதி தர சொன்னார். கவருமண்டு ஊசி குடுத்தா இவங்க கை காச குடுக்குற மாதிரி ரொம்பப் பண்றாங்க. மாத்திரை யாருக்கு வேணும்?  இந்த மாத்திரைய எப்பவாது காய்ச்சல், தலைவலி வரும் போது போட்டுக்கலாம் கைல இருக்கட்டும். இப்ப ஊசி போடுங்கனா கேக்க மாட்றாங்க."
        எனக்கு பகீரென்றது. அடப்பாவி hypertension tableta காய்ச்சல் தலைவலிக்கு போடப் போறிங்களா? நீங்க போட்டாலும் பரவாயில்ல மத்தவங்களுக்கும் கொடுப்பிங்களே! (கவர்மென்ட் ஆஸ்பத்திரில வாங்குன இலவச மாத்திரையை கொடுத்து தான் நிறைய பேர் தங்கள் வள்ளல் தன்மையை வெளிப்படுத்துவர்.)   காலைல இருந்து கஷ்டப்பட்டு diagnose பண்ணுனா ஒரு விட்டமின் ஊசி போதும்னு சொல்றாரே.
                                                      மருத்துவ அலுவலரிடம் சொன்னேன். அவரோ ரொம்ப கூலா "உனக்கு இது புதுசு. மெயின் ரோடுக்கு போற வழில ரயில்வே டிராக் தாண்டி பாரு. நம்ம குடுத்த மாத்திரைலாம் கிடக்கும். போற வழில தூக்கி போட்ருவாங்க. அவங்களுக்கு தேவை ஊசி தான். மாத்திரைய வேற வழி இல்லாம வாங்குறாங்க. ஊசி அவங்க உரிமை. அதுவும் சிபாரிசோட வந்தா ரெண்டு ஊசி போட்டா தான் போவாங்க," என்று சிரித்தார். அதன்பிறகு கருப்பையாவைத் தனியே அழைத்து மண்டகப்படி நடத்தியது தனி கதை.
                      என்ன இருந்தாலும் நம் மக்களின் அறியாமையை நினைக்கும் போது பாவமாக தான் இருக்கிறது.                       
                      

        
    


                        

17 comments:

shortfilmindia.com said...

நிதர்சன உண்மை..

அலைகள் பாலா said...

@shortfilmindia.com
நன்றி நண்பரே. எனக்கு வந்த முதல் பின்னூட்டம் இது. நன்றி!

Bruno said...

பாலா

இது மிக சுலபமான பொருளாதார சூத்திரம்

வெளியில் விற்கப்படும் மாத்திரைகள் Para, Avil போன்றவையே

அவை 2 ரூபாய் மட்டுமே

ஆக நீங்கள் என்ன மாத்திரை அளித்தாலும் (அது griseofulvin ஆனாலும் சரி cipro ஆனாலும் சரி
) நீங்கள் அவருக்கு 2 ரூபாய் மதிப்பிலான வைத்தியம் மட்டுமே செய்துள்ளீர்கள்

வெளியில் ஊசி 20 ரூபாய்

ஆக நீங்கள் என்ன ஊசி போட்டாலும் நீங்கள் அவருக்கு 20 ரூபாய்க்கு வைத்தியம் செய்துள்ளீர்கள்

அது விட்டமின் என்றாலும் சரி, நார்மல் சைலைன் என்றாலும் சரி, ceftriaxone என்றாலும் சரி - அதற்கு அவர்கள் வைக்கும் மதிப்பு 20 ரூபாய்

அவர் கணக்கு படி
நீங்கள் ஊசி போட்டால் அவருக்கு 20 ரூபாய் அளிக்கிறீர்கள் !!
நீங்கள் ஊசி போடாமல் மாத்திரை அளித்தால் அவருக்கு 2 ரூபாய் மட்டும் அளித்து விட்டு அந்த ஊசியை உங்கள் தனி கிளினிக்கில் போட்டு 20 ரூபாய் சம்பாதிக்கிறீர்கள்

ஆக

ஊசி (அது நார்மல் சைலைன் என்றாலும் கூட)
போடுபவர் நல்ல டாக்டர்

மாத்திரை கொடுப்பவர் ஊசியை தனது சொந்த கிளினிக்கு எடுத்த் செல்லும் டாக்டர்

அப்ப ”க்ளுக்கோஸ்”.... அதற்கு வெளியில் விலை 200 ரூபாய்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிரை வழி திரவம் ஏற்றும் மருத்துவர் அந்த பகுதியில் குறுநில மன்னராக விளங்குவார்

காரணம் : மற்ற மருத்துவர்கள் 20 ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கும் போது இவர் மட்டும் 200 ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கிறாரே

[பின் குறிப்பு : சிரை வழி சிப்ரோவோ மெட்ரோவோ ஏற்றும் மருத்துவர் ஏமாற்று பேர்வழி - ஏன் புரிகிறதா - சின்ன பாட்டிலை வைத்து ஏமாற்றி விட்டார் :) :) :) ]

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் 20 நோயாளிகளுக்கு சிரை வழி திரவம் ஏற்றி பாருங்கள். நீங்கள் அந்த பகுதியின் குறுநில மன்னராக இருக்கலாம்

அலைகள் பாலா said...

ரொம்ப கரெக்ட் புருனோ சார்.
இங்கு வந்து கருத்து சொன்னதற்கு மிக மிக நன்றி.

எண்ணங்கள் 13189034291840215795 said...

"கொஞ்சம் ஏமாந்து இருந்தாலும் ஊசி போடாம அனுப்பிருப்பாரு அந்த சின்ன டாக்டர். நம்ம பெரிய டாக்டர் தான் ஊசி எழுதி தர சொன்னார். கவருமண்டு ஊசி குடுத்தா இவங்க கை காச குடுக்குற மாதிரி ரொம்பப் பண்றாங்க. மாத்திரை யாருக்கு வேணும்? இந்த மாத்திரைய எப்பவாது காய்ச்சல், தலைவலி வரும் போது போட்டுக்கலாம் கைல இருக்கட்டும். இப்ப ஊசி போடுங்கனா கேக்க மாட்றாங்க."]]


என்ன சொல்ல இவங்க அறியாமையை?...:(

Dr.ராம் said...

கலக்கிட்டீங்க ... அரசு மருத்துவர்களின் நிலைமையை அப்பாவியாக கூறியுள்ளீர்கள்... வாழ்த்துக்கள்

PRABHU RAJADURAI said...

மருத்துவர்களுக்கு எப்படியோ, சாதரணர்களாகிய எங்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் பாரனாயா இருப்பதுண்டு. அதுதான், "இப்படி ஒரு நோயோடு வந்திருக்கிறோம்...இவர் வெறும் மாத்திரையோடு அனுப்புகிறாரே" என்று ஆதங்கம் வருவது இயல்புதானே!

இதைப் படிக்கும் பொழுதுதான், we miss our family doctors என்பது புரிகிறது

Interesting blog...thanks to Dr.Bruno!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எங்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயர் ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய் கிளினிக் களில் தேவையற்ற ஊசிகள் போடுவதில்லை, சில மாதங்கள் பிடித்தது மாற்றுவதற்கு.

நான் சொன்ன காரணம்:-

1.அட்டினலால், அம்லோடிப்பின் ஆகியவை மாத்திரைகளாகத்தான் வரும். ஊசி வடிவம் கண்டுபிடிக்கப் படவே இல்லை.

( சில மாதம் கழித்து ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் )



2. சி.எஃப் மாதிரி பவரான மாத்திரைகள் இங்கும் வந்துவிட்டன. இதை சாப்பிட்டாலே சரியாகிவிடும்.
(christian fellowship hospital வெகுகாலத்திற்கு முன்பே ஒட்டன்சத்திரத்தில் ஆரம்பித்து நடத்தப் பட்டுவரும் மருத்துவமனை. அங்கே பெரும்பாலும் உள் நோயாளிகளுக்கு மட்டுமே ஊசி போடுவார்கள்.)

சில வாரங்களிலேயே ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.

இதற்குக்காரணம் ;-

தேவையற்ற ஊசிப் போடுவதை ஊக்குவிக்கும் யாரும் என்னுடன் பணியாற்றவில்லை.

அலைகள் பாலா said...

@புன்னகை தேசம்
கருத்துக்கு நன்றி நண்பரே

அலைகள் பாலா said...

@ Dr.ராம்
ரொம்ப நன்றி சார். நீங்க பாராட்டியது சந்தோசமாக இருக்கிறது.

அலைகள் பாலா said...

@ SUREஷ் (பழனியிலிருந்து)
உங்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்க்க வேண்டும் சார். நிறைய முன் மாதிரி விசயங்களை அங்கு கற்றுக் கொள்ள வேண்டும். தொடரட்டும் உங்கள் தொண்டு.

அலைகள் பாலா said...

@ Prabhu Rajadurai
உண்மை தான். ஊசி இல்லாமல் நோய் குணம் ஆகாது என்ற எண்ணம நம் மக்களிடையே உள்ளது. சுரேஷ் சார் மாதிரி அதைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும். நன்றி பிரபு சார்.

முனைவர் அண்ணாகண்ணன் said...

உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்ததற்கு நன்றி.

கருப்பையாவின் கண்ணோட்டம், வேறாக இருக்கிறது. கல்வியின் வாயிலாக இதனை மேம்படுத்த முடியும். அதுவரை உளவியல் மருத்துவத்தின் ஒரு கூறாக உயிர்ச்சத்து ஊசிகளை இடுவது தவறில்லை.

மருத்துவம், தன்னிகரற்ற சேவை. அதில் எளியோருக்கு இரங்கும் தங்களை வாழ்த்துகிறேன்.

Hai said...

தொடரட்டும் உங்கள் பணி.

பட்டும் புரியாதவன் முட்டாள். என்ன இனிமே மரியாதையோட எல்லாத்துக்கும் ஊசி போட்டு விடுங்க. இல்லனா டின்னுதான்.

குகன் said...

நல்ல பதிவு.

மருத்துவம் வளர வளர வியாபார குணம் வளர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. மக்களின் அறியாமை தான் பலருக்கு பணமாக மாறிவருகிறது. அரசியலாகட்டும், மருத்துவமாகட்டும் இதில் விதிவிளக்கல்ல....

சரவணன் said...

இங்கு சென்னையில் எனக்குத் தெரிந்த ஹோமியோ மருத்துவர், சுன்டு விரல் அளவு மாத்திரை பாட்டில்கள் இரண்டு, மூன்றைக் கொடுத்துவிட்டு ரூ. 600 வாங்குகிறார். கூட்டம் அம்முகிறது. அவர் சமயநல்லூரில் கிளினிக் வைப்பது பற்றிக் கனவு கூடக் காண முடியாது!

படித்த, படிக்காத (கிராம, நகர) மக்களிடையே ஏன் இந்த வித்தியாசம்? கிராமத்து மக்களின் அறியாமையை நினைத்தால் சிரிப்பை விட எனக்கு வருவது சோர்வுதான். சில மணி நேரத்தில் 300 பேரைப் பார்த்து அனுப்ப நிர்பந்திக்கிற சூழ்நிலையில் எப்படித்தான் உற்சாகம் இழக்காமல் பணியாற்றுகிறீர்களோ...அதிலும் மெடிக்கல் டூரிசம் என்று வருகிற வெளிநாட்டுக்காரர்களுக்குச் சிகிச்சை தந்து இதைவிடப் பல மடங்கு சம்பாதிக்கிற வாய்ப்புகள் பளிச்சிடுகிறபோது! People like you deserve the highest appreciation.

Bruno said...

//கருப்பையாவின் கண்ணோட்டம், வேறாக இருக்கிறது. கல்வியின் வாயிலாக இதனை மேம்படுத்த முடியும். அதுவரை உளவியல் மருத்துவத்தின் ஒரு கூறாக உயிர்ச்சத்து ஊசிகளை இடுவது தவறில்லை.//

இது தான் என் கருத்தும் கூட
ஆனால் மருத்துவர்களை திட்ட வேண்டும் என்பதற்காக இதை கூட தவறு என்று கூறுபவர்களும் உள்ளனர்

இங்கு பார்க்கவும்